ஐய்யோ !!! தமிழ் பள்ளியா ????

எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர், என்னைவிட வயதில் மூத்தவர், நெடு நாட்களுக்கு பிறகு சமீபத்தில் சந்தித்தேன். சராமாரியான விசாரிப்பு கேள்விகள். எப்படி இருக்கிறாய்,எங்கு இருக்கிறாய், என்ன செய்கிறாய் இப்படி ஆயிரம் கேள்விகள்.

பிறகு நான் அவர் குடுப்பத்தைப் பற்றி கேட்டேன். பெருமையாய் சொன்னார். அவர் மகள் பெங்களூரில் டாக்டருக்கு படிப்பதாக சொன்னார். SPM-இல் 12A-க்கள் எடுத்ததாக சொன்னார். நான் மிகுந்த சந்தோசத்தில் தமிழ் மொழிபாடம் மற்றும் தமிழ் இலக்கியப் பாடம் இரண்டிலும் A-வா என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு மின்சாரம் தாக்கியது போல் இருந்தது.

அவர் என்னிடம் கேட்டார், டாக்டருக்கு படிக்க போகும் பெண்ணை தமிழ் படிக்க சொல்கிறாயா என்றார். இத்தனைக்கும் அவர் ஒரு தமிழ் பள்ளி ஆசிரியர். இன்னும் சிறிது காலத்தில் துணைத் தலைமை ஆசிரியர் ஆகப் போகிறவர். அப்போதுதான் இன்னொரு அதிர்ச்சியான சேய்தியும் சொன்னார், அவரின் மூன்று பிள்ளைகளையும் தமிழ் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று ......

ஆ .... எனக்கு மயக்கம் வராத குறைதான்.... டாக்டருக்கு படிப்பவர்கள் தமிழ் படிக்கக்கூடாது என்கிற ஐதீகம் அன்றுதான் எனக்கு தெரிந்தது. மேலும் தமிழ் பள்ளி ஆசிரியராக இருப்பவர்கள் பல ஆசாமிகள் தங்கள் பிள்ளைகளை பிற மொழி பள்ளிகளுக்கு அனுப்பும் சூட்சமும் அன்றுதான் உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் எனக்கு மற்றொரு நண்பர் நினவுக்கு வந்தார். அவர் பெயர் ஏழுமலை. படிக்காதவர். டாக்சி ஓட்டுகிறார். அவர் மகன் பெயர் ஜகநாதன். மலாயா பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு டாக்டருக்கு படிக்கிறார். இந்த ஜகநாதன் SPM நிலையில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் இரண்டு பாடத்திலும் A1 எடுத்தார்.

படிக்காத என் நண்பரின் மகன் எல்லா தேர்விலும் தமிழைத் தேர்வு பாடமாக எடுத்து சிறந்த மதிப்பெண் பெற்று இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகிறார்.

மெத்தப் படித்த என் இன்னொறு நண்பர் அதுவும் தமிழ் பள்ளி ஆசிரியர் தன் பிள்ளைக்ளுக்கு தமிழ் அறிவை கொடுக்காமலும் தமிழால் வருமானம் பெற்றும் வருகிறார் ....